Tuesday, 27 January 2015

மூத்த குடிமக்கள் அறிய வேண்டியவை

முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வயது ஒரு தடையல்ல. எக்காலத்திலும் நமது நிதி ஆதாரத்தைப் பெருக்கி, தெம்பூட்டுபவை முதலீடுகள்தான். எனவே மூத்த குடிமக்களும் தயக்கமின்றி முதலீட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடலாம். 

ஆனால் முதலீடு மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் சில விஷயங்களை கட்டாயம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது வாழ்நாள் சம்பாத்தியம் அல்லது சேமிப்பைத்தான் முதலீடு செய்வார்கள். எனவே 'ரிஸ்க்' அதிகம் இல்லாத முதலீட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவதே நல்லது. பாதுகாப்பும், நிலையான பயன்களையும் தரக்கூடிய திட்டங்களில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்யலாம். 

இந்த முதலீடுகள்தான் தங்களது வழக்கமான செலவுகளுக்கான ஒரே நிதி ஆதாரமாக இருக்கும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் முதலீடு செய்யும் வழிமுறைகள், அவர்களது செலவுகளுக்குத் தேவைப்படும்போது உடனடியாக பணத்தைத் தருவதாக இருக்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான சில முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்... 

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம் எஸ்.சி.எஸ்.எஸ்.): 

இந்திய அரசு விசேஷமாக மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள சேமிப்புத் திட்டம் இது. இதில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஐந்து ஆண்டு காலத்துக்கான இந்த முதலீட்டுத் திட்டம் 9 சதவீத வட்டியை அளிக்கிறது. 

மாதாந்திர வருவாய்த் திட்டங்கள் (மன்த்லி இன்கம் பிளான்ஸ் எம்.ஐ.பி.):

ஓரளவு 'ரிஸ்க்'கை எதிர்கொள்வதற்குத் தயாரானவராக இருந்தால், மாதாந்திர வருவாய்த் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அளிக்கும் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்பு ஆகும். எம்.ஐ.பி. எனப்படும் இந்த மாதாந்திர வருவாய்த் திட்டங்களில் 15 முதல் 20 சதவீத அளவுக்கு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பயன்களுக்கு வரி கிடையாது. இருந்தபோதிலும், முதலீடு செய்பவர்கள் சந்தை ரிஸ்க்குளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

வைப்புத்தொகை (பிக்சட் டெபாசிட்): +


நிரந்தர வைப்புத்தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட், மற்ற முதலீடுகளைவிட கூடுதலாக 0.5 சதவீத வட்டி அளிக்கக்கூடியது என்பதால் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்பாகும். தற்போது நிரந்தர வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் குறைந்து வருகிறது. எனினும் சில வங்கிகள் இதற்கு அதிக வட்டி அளிக்கின்றன. 'டெட் மியூச்சுவல் பண்ட்கள்': மூத்த குடிமக்கள், குறைந்த ரிஸ்க் கொண்ட 'டெட் மியூச்சுவல் பண்ட்'களில் முதலீடு செய்யலாம். இந்த வகை மியூச்சுவல் பண்ட்கள் ஆண்டுக்குச் சுமார் 10 சதவீத வருமானத்தைத் தருகின்றன.

0 comments:

Post a Comment