Friday, 30 January 2015

டாப்சி கலக்கல் பேட்டி


அன்பின் வெளிப்பாடு முத்தம்; அதை காட்சிப்படுத்துவதில்என்ன தப்பு?

'ஆடுகளம்' படத்தில் அதகளம் பண்ணியவர்; முதல் படத்திலேயே, ரசிகர்களின் இதயங்களில் 'பச்சக்' என, பதிந்தவர்; வெள்ளாவி வைத்து வெளுத்து, வெயிலுக்கு காட்டாமல் வளர்ந்த டாப்சி, கொஞ்சி, கொஞ்சி பேசும் அரை குறையான தமிழ் கூட அவ்வளவு அழகு. அவருடன் பேசியதிலிருந்து...

தமிழ் சினிமாவிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டீர்களே...

எங்கும் போகவில்லை; இந்தியாவில் தான் இருக்கேன். கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. என் மனதுக்கு பிடித்த படங்களில் மட்டும் நடிப்பேன். ரசிகர்களிடம் எனக்கென ஒரு நல்ல பெயர் உள்ளது; அதை கெடுக்க விரும்பவில்லை. ஹீரோவுடன் டூயட் பாடிவிட்டு, சில காட்சிகளில் மட்டும் தலையை காட்டி விட்டு போவதில் விருப்பமில்லை. ஒரு காட்சியில் நடித்தாலும், அது, ரசிகர்களின் மனதை வருடும் காட்சியாக இருக்க வேண்டும்.

இரண்டு ஹீரோயின் படங்களில் அதிகமாக நடிக்கிறீர்களே?

'ஆரம்பம்' படத்தில் நயன்தாரா கூட நடித்தேன். 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தில், லட்சுமி மஞ்சுவுடன் சேர்ந்து நடித்தேன். 'வை ராஜா வை' படத்தில், ப்ரியா ஆனந்த் கூட நடிச்சிருக்கேன். கதை கேட்கும் போதே, என் ரோல் என்ன என்பது, எனக்கு நன்றாகவே தெரியும். சின்ன ரோலாக இருந்தாலும், டாப்சி பேர் அங்க நிக்கணும். வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை. இரண்டு ஹீரோயின் படங்களில் நடிப்பது பற்றி எனக்கு கவலையில்லை.

'ஆடுகளம்' அனுபவம் பற்றி...

அந்த படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. மொழி தெரியாமல், மதுரை பகுதி மக்களின் வாழ்க்கை முறை தெரியாமல், அந்த படத்தில் நடித்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த ஆதரவு தான் இதற்கு காரணம்.

உங்களுக்கு ஏற்ற நடிகர் என யாரை நினைக்கிறீர்கள்?

இதுவரை என்னுடன் இணைந்து நடித்த எந்த நடிகருடனும், எனக்கு நெருக்கமும் இல்லை; பகையும் இல்லை. இப்போது கூட, அனைவரிடமும் பேசுவேன். ஆர்யா, கலகலப்பான ஆள்; சீரியசாக இருந்தாலும், ஏதாவது காமெடி செய்து, சிரிக்க வைத்து விடுவார்.

சீக்கிரமே சரளமாக தமிழில் பேசுவீர்கள் போலிருக்கிறதே...

படித்தது, வளர்ந்தது எல்லாம் டில்லி தான். தமிழில் அவ்வளவாக பேச வராது. ஆனால், திக்கி, திணறி பேசுவேன்; அதுவும், இலக்கண பிழை அதிகமாக இருக்கும். டிரைவரிடமும், சென்னையில் 'ஷாப்பிங்' போகும்போதும் தமிழில் பேசுகிறேன். சீக்கிரமாகவே சரளமாக பேசலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை?

சினிமாவை விட்டு போவதற்குள், மணிரத்னம் சார் இயக்கும் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை; வெறியே உள்ளது. அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

இப்போது தமிழ் சினிமாவில் முத்த காட்சிகள் அதிகமாக வருதே...

காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றால், முத்த காட்சி வைப்பதில் தப்பே இல்லை. கண்களால் பார்ப்பது மட்டுமே காதல் இல்லை; உதடுகளுடன் உதடுகள் பேசுவதும் காதல் தான். அன்பின் வெளிப்பாடு முத்தம்; அதை காட்சிப்படுத்துவதில் என்ன தப்பு? அதே நேரத்தில், வெறும் விளம்பரத்துக்காகவோ, ஆபாசமாகவோ முத்த காட்சி படமாக்கப்பட்டால், கண்டிப்பாக அது தவறு.

காதலைப் பற்றி இவ்வளவு அனுபவித்து பேசும் நீங்களும், யாரோ ஒரு விளையாட்டு வீரரை காதலிப்பதாக...

இதுவரை இந்த கேள்வி கேட்கவில்லையே என்று பார்த்தேன். முன்பெல்லாம், இதுபோன்ற செய்தி வந்தால், வருத்தப்படுவேன்; இப்போது அந்த கவலையில்லை. என்ன வேண்டுமானாலும் எழுதட்டும் என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டேன். என் கல்யாணம், காதல் கல்யாணமா என்பதை இப்போது சொல்ல முடியாது. அதற்கு, இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

உங்களுக்கு ரொம்ப பிடித்த உடை?

சொன்னா நம்ப மாட்டீங்க; எனக்கு பாவாடை, தாவணி தான் ரொம்ப பிடிக்கும். 'மறந்தேன் மன்னித்தேன்' எனக்கு பாவாடை, தாவணி அவ்வளவு அழகாக பொருந்தியது.

0 comments:

Post a Comment